கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பத்மநாபபுரம் மேற்கு கோட்டைப் பகுதியில் வசித்து வருபவர் சிவன். தச்சுத் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஐந்து வருடங்களுக்கு முன் இவரது மகன் விஷ்ணு (26) காதல் திருமணம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அன்று முதல் சிவன் வீட்டு மாடிப்படிக்கட்டு, இடை வெளியில் தார்பாய் கொண்டு சிறிய கொட்டகை அமைத்து அதில் வசித்து வந்துள்ளார். மேலும், குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் வழக்கம் போல் சிவன் நேற்றிரவு மாடிப் படிக்கட்டில் அமைந்துள்ள சிறிய கொட்டகையில் சென்று தூங்கியுள்ளார்.
இன்று அதிகாலை அக்கம் பக்கத்தினர், அந்த வழியாகச் செல்லும் போது சிவன் வீட்டு மாடி படிக்கட்டில் சாம்பல்கள் கிடப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சிவன் படுத்த நிலையிலேயே, சந்தேகத்துக்கு இடமான முறையில், உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.
மேலும் கொட்டகையும் முற்றிலும் எரிந்து சாம்பலாகி இருந்தது. இதுகுறித்து சிவன் குடும்பத்தினர் தக்கலை காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை காவல்துறையினர், முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்ட சிவனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிவனின் மகன் விஷ்ணுவை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர், சிவன் தீ விபத்தால் உயிரிழந்தாரா இல்லை, வேறேதும் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: