கன்னியாகுமரி மாவட்டம், மீனவக் கிராமங்களில் தான் கரோனா தொற்றானது அதிகளவு பரவி காணப்படுகிறது. முதலில் மார்த்தாண்டன்துறை மீனவக் கிராமத்தில் மீனவர் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தூத்தூர், சின்னத்துறை, பூத்துறை, நீரோடி, ததேயபுரம் காலனி உள்ளிட்டப் பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்பானது அதிக அளவு ஏற்பட்டது. இதில் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்கும் திரும்பினர்.
மேலும் இந்த கரோனா தொற்றானது மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கும் என்று சுகாதாரத்துறை சார்பில், ஒவ்வொரு ஊரிலும் உள்ள மக்களின் சளி மாதிரிகள் எடுத்துப் பரிசோதனை செய்ய முயன்றனர்.
அப்போது ஒரு சில நபர்கள் மட்டும் பரிசோதனை செய்ய ஒத்துக்கொண்ட நிலையில், சில ஊர்களில் தற்போது பரிசோதனையை மக்கள் முற்றிலும் புறக்கணித்து வருகின்றனர்.
எனவே, அவ்வப்போது ஒவ்வொரு ஊரிலும் சிலர் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். அப்போது அவர்களுக்கு, அங்கு கரோனா பரிசோதனை செய்யும் போது கரோனா தொற்று இருப்பது உறுதியாகிறது. மேலும் கரோனா தொற்று கண்டறியப்படுபவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் செல்லாமல் அடம்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (14.07.2020) காலை மார்த்தாண்டன்துறைப் பகுதியில் உள்ள ஒரு மீன் சந்தையில் மீன், காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளும், பொதுமக்களும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசங்கள் அணியாமலும் ஒருவரை ஒருவர் இடித்தபடி நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் அரசானது வீட்டிலிருப்போர் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால், அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால், இந்தப் பகுதிகளில் சாலைகளில் நடந்து செல்லும் யாரும் முகக்கவசம் இல்லாமலேயே சுற்றித் திரிகின்றனர்.
இதேபோன்று, நீரோடி பகுதிக்கு அடுத்து கேரள மாநிலம் ஆரம்பமாகிறது. கேரளாவிலும் பூந்துறை, பொழியூர் உள்ளிட்ட மீனவக் கிராமங்களிலும் கரோனா தொற்று அதிகம் உள்ளது. மேலும் அங்கு உள்ளவர்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல் இருக்கின்றனர். இதனால் கேரள அரசானது அப்பகுதிகளில் மத்திய ஆயுதப் படையைப் பாதுகாப்புப் பணியில், ஈடுபடுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
அதே வேளையில் தமிழ்நாட்டில், தற்போது வரை எந்தக் கட்டுப்பாடும் காணப்படவில்லை. எனவே, முறையான பாதுகாப்பைப் பின்பற்றி, கரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா பிரிவில் போதிய வசதிகள் இல்லை! பரவும் காணொலி...