கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மகனுக்கு உணவு வாங்க சாலைக்கு வந்த பெண்ணின் 8 சவரன் தங்க சங்கிலியை இருச்சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இரணியல் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் ஊரணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் (48). இவர் தனது மகனை அறுவை சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
நேற்று இரவு மகனுக்கு உணவு வாங்குவதற்காக வேலம்மாள் மருத்துவமனைக்கு முன் இருந்த உணவகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த இருவர் வேலம்மாள் கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து வேலம்மாள் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனை முன்பு இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க... ஓடும் பேருந்தில் நகை பறிப்பு: வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!