கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”ஜூலை 24ஆம் தேதி காலை 4 மணியளவில் 5 மீனவர்கள் தேங்காபட்டணம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். மாலை 5 மணியளவில் வீடு திரும்பியபோது, தேங்காபட்டணம் துறைமுகம் அருகே மிகப்பெரிய அலையில் சிக்கி படகில் இருந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில் ஷிப்பு என்பவர் கடலில் மூழ்கி மாயமானார்.
கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் இரண்டு விபத்துகளில் ஷிப்பு உட்பட 2 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். எனவே காணாமல் போன மீனவரைக் கண்டுபிடிப்பதற்கு விமானப் படை, கப்பற்படை கொண்டு தேடுதல் நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் மீனவரைக் கண்டுபிடித்து, அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ”அடையாளம் தெரியாத நபரின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இரண்டு மீனவர்களின் குடும்பத்தினருக்கும் அடையாளம் தெரியாததால் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு குறித்த நிலை அறிக்கையை மத்திய உள்துறைச் செயலர் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.