காஞ்சிபுரம் அருகேவுள்ள உத்தரமேரூர் குழம்பேஸ்வரர் கோவில் தெருவில் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. அதற்காக, பள்ளம் தோண்டப்பட்டபோது பூமியிலிருந்து பழங்கால தேவி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்தச் சிலைக்கு நீர் ஊற்றி சுத்தம் செய்து, பூஜை செய்து வழிபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் அலுவலர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து அச்சிலையைப் பார்வையிட்டனர். மேலும், இந்தச் சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி சிலை என்பதையும் உறுதிசெய்தனர்.
இது குறித்து அவ்வரலாற்று மையத்தின் தலைவர் கொற்றவை, “இச்சிலையானது 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உடையது. வெண் கொற்றக்குடையின் கீழ் கரண்ட மகுடத்துடன் காதில் பத்ர குண்டலமும், மார்பில் அணிகலன்களும் அணிந்தும், இடுப்பில் ஆடை அணிந்து அமர்ந்த நிலையிலும் உள்ளது.
வலப்புறத்தில் காக்கை உருவமும், அதன் கீழ் அவர்களது மகன் மாட்டுத்தலை வடிவத்துடனும் உள்ளார். இடப்புறமாக மகள் மாந்தியும் அவரது காலின் கீழ் பெண் அடியவர் ஒருவர் பணப்பெட்டியை தலையில் வைத்துள்ள நிலையிலும் உள்ளார். இவர் திருமாலின் மனைவியான லட்சுமியின் மூத்த சகோதரி ஆவார்.
திருவள்ளுவர், ஔவையார், சங்க இலக்கியங்கள் ஆகியவற்றில் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பல்லவர் காலத்தில் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாகவும் இருந்தவர். சோழர் கால வழிபாட்டிலும் தொடர்ந்த இந்த தெய்வம் வளமையின் அடையாளமாகவும் போற்றப்பட்டுள்ளார்.
அண்மையில் குழம்பீஸ்வர் கோயில் கும்பாபிஷேகத்திற்காகத் திருப்பணிகள் தொடங்கியபோது தங்க ஆபரணங்கள் நிரம்பிய பெட்டி ஒன்றும் இக்கோயில் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் ஒருவர் கைது!