சென்னை: தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஹுன்டாய் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மூன்று ஷிப்ட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது .
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதை அடுத்து இன்று முதல் தளர்வு இல்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள வேலையில் தொழிற்சாலைகள் இயங்க தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையில், பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹுன்டாய் தொழிற்சாலையில் இன்று காலை முதல் ஷிப்டுக்கு பணிக்கு வந்த பணியாளர்கள் திடீர் போரட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருவதால் பெரும்பாலான ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் மூலம்தான் அவர்களுடைய குடும்பத்தினரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சூழலில் மீண்டும் தொழிற்சாலைகள் செயல்பட்டால் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர்கள் காலை முதல் ஹுன்டாய் தொழிற்சாலைக்குள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இதையடுத்து உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடையே நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள், அவர்களின் குடும்ப நலம் கருதி இந்த ஒரு வாரம் ஊரடங்கில் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, வருகின்ற 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலுள்ள ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிப்பதாக நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு உறுதியளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழிற்சாலை நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு தொழிலாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் மற்றொரு சென்னை ஆசிரியர்!