செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர், கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார்.
பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் நேற்று(ஜூன்.16) கைது செய்யப்பட்டார்.
டெல்லி நீதிமன்றத்தில் நேற்று(ஜூன்.16) பிற்பகலில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனையடுத்து இரவோடு, இரவாக பாபாவை சென்னைக்கு சிபிசிஐடி காவலர்கள் அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடைபெற்றது.
அப்போது, பாலியல் புகார் தொடர்பாக, சிபிசிஐடி காவலர்கள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்தததாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணைக்கு பின்னர், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் ( ஜூலை 1 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே:குழந்தைகளை தத்தெடுக்க சட்டப்பூர்வமாக அணுகுங்கள்- மருத்துவர் கேப்டன் அகஸ்டஸ் சாமுவேல் டாட்