காஞ்சிபுரம் மாவட்டத்தில் எட்டு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதில், ஆறு பேர் வீடு திரும்பி, தற்போது இரண்டு பேர் மட்டுமே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வட மாநிலத்தவர்கள் 37 ஆயிரத்து 500 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கு மார்ச் முதல் வாரத்தில் முதல் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்குத் தேவையான உணவு, தங்கும் வசதிகள் அனைத்தையும் 165 ஒப்பந்ததாரர்களும், 62 தொழிற்சாலைகளும் செய்து வருகின்றன. இது மட்டுமில்லாமல் எழுச்சூர் பகுதியில் உள்ள தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதியில் 300க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் ஏழு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 140 இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனை நேற்று தொடங்கியது. இந்நிலையில் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் உள்ள தொழிற்சாலை விடுதியில் தங்கியுள்ளவர்களுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று 27 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது. இன்று அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 300 ரேபிட் டெஸ்ட் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிகப் பாதிப்பு உள்ள பகுதிகளான நான்கு மண்டலங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு இக்கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வாலாஜாபாத் துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, டாக்டர் தனசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க...வெறும் 100 ரூபாயால் 37 ஆண்டுகள் சிறை தண்டனையைப் பெற்ற இளைஞர்!