கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பின்றி அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்காக அதனை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை சாமான்கள், பால், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவைகளின் விலைகளை அதிகப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெரு தென்கோடி பகுதியில் மளிகை கடை நடத்திவரும் முத்துக்குமார், அவரது கடையில் அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா உத்தரவிட்டதன் பேரில், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அந்த கடைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு அதிக விலைக்கு விற்பதை கண்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மளிகை கடைக்கு சீல் வைத்தார். மேலும் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற இரண்டு கடைகள் சீல் வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: இந்தியாவில் முதலாவதாக கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிரசவம்!