தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஒரு பகுதியாக, காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம், பஸ் நிலையம் அருகே மக்கள் மத்தியில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
"தி.மு.க. ஆட்சியின் போது எந்த திட்டமும் உருப்படியாக நடக்கவில்லை. 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட சேது சமுத்திர திட்டம் வீணானதுதான் மிச்சம். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இன்று அந்த வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது.
இப்படி மக்கள் அரசாக திகளும் இந்த அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. திமுக ஆட்சியில் மின்தடை ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். இன்றும் அதை மக்கள் மறக்க மாட்டார்கள். ஆனால் இன்று எங்கும் மின் தடையே கிடையாது. மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் மீது தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாத மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். கனவு காண்கிறார். அவரது முதல்வர் கனவு பலிக்க போவது கிடையாது", என்றார்.