காஞ்சிபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வரும் அதிமுக அணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச்செயலாளராக இருந்த முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமாரை காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவின் மாவட்டச்செயலாளராக நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
அதன்படி புதிய மாவட்டச்செயலாளராக நியமிக்கப்பட்ட முத்தியால்பேட்டை ஆர்வி.ரஞ்சித்குமாரை அறிமுகப்படுத்தும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் புதிய மாவட்டச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித்குமார் காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்டப்பகுதிகளில் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பிரசித்திபெற்ற முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக காஞ்சிபுரம் மாவட்டச்செயலாளரை அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் அணி நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இரட்டை இலையை ஆசிர்வாதமாக வழங்குவதுபோலவும், அதனை ஓ.பன்னீர்செல்வம் வணங்குவது போலவும் பேனர்கள் வைக்கப்பட்டதால் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விளம்பரப்பேனர்களை பார்த்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவதற்கான முன்னோட்டமோ என முணுமுணுத்தபடி ஓ.பன்னீர்செல்வத்தின் அணி நிர்வாகிகள் வைத்தப் பேனரை ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.
இதையும் படிங்க: ’தைரியமான ஆண்மகனாக இருந்தால் ஓபிஎஸ்ஸை தொட்டு பார்க்கட்டும்..!’ - ஓபிஎஸ் ஆதரவாளர் சவால்!