காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டராம்பாக்கம் கிராமத்தில் கேன்டூர் தனியார் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்நிறுவனத்திற்குச் சொந்தமான மினிவேன், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பணியாளர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் சாலையில் குன்றத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது, வேனுக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனம் திடீரென பிரேக் பிடித்ததால் பைக் மீது மோதாமல் இருக்க மினி வேனை ஓட்டுநர் திருப்பியுள்ளார். அப்போது, கட்டுபாட்டை இழந்த மினி வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் படுகாயங்களுடன் சிக்கியிருந்த ஐந்து ஊழியர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நபர் கைது