காஞ்சிபுரம், ஓரிக்கை ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பால் வியாபாரி சண்முகம். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில் இவரது இளைய மகள் சரண்யா (வயது 24) காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தின் கிடங்கு மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் பணிபுரியும் அரசு அலுவலகத்தில் கழிவறை வசதி இல்லாததால், கழிவறையை உயயோகிக்க அருகில் உள்ள வீட்டிற்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இவர் வழக்கம் போல் முறையாக கட்டி முடிக்கப்படாத அந்த வீட்டின் கழிவறையில் மூலையில் அமைக்கப்பட்ட பத்தடி ஆழம் உள்ள செப்டிக் டேங்கில் இன்று மதியம் (டிச.05) தவறி விழுந்தாகக் கூறப்படுகிறது.
இவர் நீண்ட நேரமாகியும் திரும்பாத காரணத்தால் உடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தேடியபோது இவரது காலணி கழிவறையிலிருக்கும் செப்டிக் டேங்கில் மிதந்துள்ளது.
இதையடுத்து, செப்டிக் டேங்க்கில் அவரை தேடியபோது சரண்யா நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள், பொதுமக்கள் சரண்யாவிற்கு முதலுதவி அளித்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த சரண்யாவின் குடும்பத்தினர் அவரது மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்று கதறி அழுதது காண்போர் கண்களில் இருந்து கண்ணீர் வரவழைத்தது. இதனால், அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
வீடுகள் தோறும் கழிவறை திட்டம் அமல்படுத்தி வருகிறோம் என அரசு கூறிவரும் நிலையில், அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களில் கழிவறை இல்லாததால் பெண் ஊழியர்கள் அழுத்தத்துக்கு உள்ளாகிறார் என்று பல குரல்கள் எழுப்பியும் செவிசாய்க்காததால் தான் இன்று அரசு பெண் ஊழியரின் மரணம் நிகழ்ந்துள்ளது.
இனியாவது அரசு அலுவலகங்களில் கழிவறை கட்டாயம் என்பதை அரசு உணருமா என்ற கேள்வியே எல்லோர் மனதிலும் எழுகிறது.
இதையும் படிங்க: ரயிலில் ஏறி செல்ஃபி எடுத்த சிறுவன் உடல் கருகி பலி!