காஞ்சிபுரம் அருகே விநாயகபுரம் என்ற பகுதி உள்ளது. இதில் நடுத்தர அரசு ஊழியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் தொடர் கொள்ளைகள் நடைபெற்றுவருகின்றன. புதியதாக வீடுகளை வாங்கிக் கொண்டு இப்பகுதியில் குடியேறுபவர்களை கவனத்தில் கொண்ட மர்ம நபர்கள் இங்கு பலமுறை கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு மர்ம நபர்கள் உடல் முழுவதும் எண்ணெய் தடவிக் கொண்டு இப்பகுதியில் உள்ள இரண்டு வீட்டின் கதவு பூட்டை உடைத்துள்ளனர். சப்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் எழுந்து வெளியே வந்து பார்க்கும்போது இவர்கள் கத்தியை காண்பித்தும் கற்களை எடுத்து வீசியும் அவர்களை அச்சுறுத்தினர்.
இதனால் அச்சப்பட்ட அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.
இதனையடுத்து அந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்த காரணத்தினால், அதில் பதிவான வீடியோக்களை எடுத்து பார்க்கும்போது, குறவர்கள் எனப்படும் இவர்கள் பிரபல கொள்ளையர்களாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து பாலுச்செட்டிசத்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.