கள்ளக்குறிச்சி: புக்கிரவாரி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், நேற்று (ஆகஸ்ட் 03) மது அருந்துவதற்காக வரதப்பனூர் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கோகுல் என்பவரும் மது அருந்த வந்துள்ளார்.
பீர் பாட்டிலால் அடித்த இளைஞர்
ராஜாவும், கோகுலும் ஏற்கனவே மதுபோதையில் இருந்த நிலையில், இருவரும் மேலும் பீர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு மது அருந்த சென்றுள்ளனர். அப்போது, இருவரும் தாங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டில்கள் யார் யாருடையது என்ற குழப்பத்தில், இது என்னுடையது இது உன்னுடையது என சாலையின் நடுவே பீர் பாட்டிலை வைத்து தகராறில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் ராஜா தன்னிடம் இருந்த ஒரு பீர் பாட்டிலை தரையில் போட்டு உடைக்க, அதனைக்கண்டு ஆத்திரமடைந்த கோகுல் தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ராஜாவின் முகத்தில் ஓங்கி அடித்துள்ளார். இந்த சம்பவத்தில் ராஜா சுருண்டு விழுந்து சுயநினைவை இழந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற ராஜா, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் காவல் துறையினர், ராஜாவை பீர் பாட்டிலால் தாக்கிய கோகுலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஆன்ட்டி' எனக் கூறியதால் அடிதடியில் இறங்கிய 40 வயது பெண்