சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசு குத்தகைக்கு எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இச்சூழலில், கோயில் நிலத்தை நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக 2020 நவம்பர் 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி முறையான சட்ட விதிகளைப் பின்பற்றாமல் குத்தகைக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சியை சுற்றியே அரசுக்குச் சொந்தமான 39 இடங்களில் நிலம் உள்ளபோது, கோயில் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி கோயில் நிலங்கள், கோயிலின் தேவை மற்றும் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், என்னதான் குத்தகை மூலம் கோயிலுக்கு வருமானம் கிடைத்தாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுவிட்டால் அது நிரந்தரமாகிவிடும் எனவும், அந்த நிலம் மீண்டும் கோயிலுக்குத் திரும்பக் கிடைக்கப் பெறாமல் போகும் எனவும் தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் கார்த்திகேயனும், சம்பந்தப்பட்ட இடத்தின் மூலம் கோயிலுக்கு தற்போது எந்த வருமானமும் இல்லை எனவும், அந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதன் மூலம் கோயிலுக்கு மாதம் 1.3 லட்சம் வாடகையாகக் கிடைக்கப்பெறும் எனவும், இதன் மூலம் கோயிலுக்கு வருவாய் பெருகும் எனவும் தெரிவித்தார்
அதேபோல, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலைப் புனரமைக்க அரசு 2.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நீதிமன்றங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இடம் பெறவுள்ளதாகவும், மனுதாரர் குறிப்பிடும் மற்ற இடங்கள் உகந்ததாக இல்லாததின் காரணமாகவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
பட்டாசு ஆலைகளை அலுவலர்கள் சரியாக ஆய்வு செய்வதில்லை - மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு!
இச்சூழலில் வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கக் கோயில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், வாடகை நிர்ணயம் செய்வது மற்றும் நிலத்தின் மதிப்பீட்டை நிர்ணயம் செய்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நீதிபதியை நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்த இரு நபர் குழு நிலத்தின் மதிப்பீட்டை ஆராய்ந்து மூன்று வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், அதுவரை கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.