கள்ளக்குறிச்சி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இத்தருணத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வருகிறார்கள் முன்களப் பணியாளர்கள். இவர்களது பணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஜூன்.06) உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற என்.எல்.சி ஊழியரான இளந்தமிழனும், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையான அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் முன் களப்பணியாளர்களான துப்புரவு தொழிலாளர்கள் 100 பேரின் சேவையை பாராட்டும் விதமாக, தகுந்த இடைவெளியுடன் அவர்களுக்கு பாத பூஜை செய்து, உணவளித்து, உபசரித்து, புத்தாடைகள், பாதுகாப்பு கவசங்களான முகக் கவசம், கிருமி நாசினி, கையுறை மற்றும் ஆக்சிஜன் பெருமளவில் வெளிப்படுத்தக்கூடிய புங்கன் மரக்கன்றுகளை வழங்கினர்.
இதனை பெற்றுக்கொண்ட முன்களப் பணியாளர்கள், கரானா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்கும் தங்களை கெளரவித்த அந்தத் தம்பதியினரை வாழ்த்தி நன்றி தெரிவித்ததோடு, தொடர்ந்து சிறப்பாக களப்பணி ஆற்றுவோம் என்று மகிழ்ச்சி பொங்க உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் தினமும் ரூ.150 கோடி மதிப்பில் துணி உற்பத்தி பாதிப்பு!