கடந்த சில நாள்களாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்டு, ஈரோடு திரும்பியவர்கள் பலருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, 10க்கும் மேற்பட்டோர் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட வளையக்கார வீதிப் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி ஏற்கெனவே ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று (ஜூன் 23) கூடுதலாக ஒரு பெண் உயிரிழந்திருப்பது ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.