ஈரோடு: அந்தியூர் அருகே உள்ளது பர்கூர் மலைப்பகுதி, இங்கு உள்ள ஒன்னகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னமாதன் - சாந்தி தம்பதி. சோழகர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
சின்னமாதன் - சாந்தி தம்பதியினருக்கு ஏற்கனவே 12 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சாந்தி மீண்டும் கருத்தரித்தார். தொடர்ந்து சாந்தி கருத்தரிப்பை அறிந்த மருத்துவ குழுவினர் அவரின் வீட்டுக்குச் சென்று அவருக்கு அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூலம் ஏற்படும் உடல் பிரச்சினைகளை எடுத்துக் கூறி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள கேட்டுக்கொண்டனர், ஆனால் சிகிச்சைக்கு மறுத்து சாந்தி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டார்.
இதேபோல் ஒவ்வொரு முறையும் மருத்துவக் குழுவினர் செல்லும் போதெல்லாம் வனப்பதிகுள் சென்று மறைந்துக்கொள்வதை சாந்தி வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் செய்வதறியாமல் தவித்த மருத்துவக் குழுவினர் சிறிது நேரம் அவரது கணவரை வசைப்பாடிவிட்டு நொந்தபடி அங்கிருந்து சென்றுவிடுவார்கள்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாந்தி இரு தினங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த ஆண் குழந்தை உடன் சேர்த்து மொத்தம் சாந்திக்கு 13 குழந்தைகள். அதில் 8 ஆண் குழந்தைகள் 5 பெண் குழந்தைகள். (13 குழந்தையும் வீட்டிலேயே பெற்றெடுத்துள்ளார்) அதில் ஒரு முறை இரட்டை குழந்தை. இதுவரையிலும் மருத்துவமனைக்கு சாந்தி சென்றதே இல்லையாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சின்னமாதன் - சாந்தி தம்பதிக்கு பிறந்த முதல் ஆண் குழந்தைக்கு தற்போது 25 வயதாகும் நிலையில் அவருக்கு திருமணமாகி தனது மனைவியுடன் வெளியூரில் வசித்து வருகிறார். இதனிடையே, அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர், காவல் துறையினர், வருவாய்த்துறையினர் என அரசு நிர்வாகமே சின்னமாதனின் வீட்டிற்கு சென்று பிறந்த ஆண் குழந்தையை பார்வையிட்டு, உடல்நலத்தை பரிசோதித்தனர்.
அப்போது குழந்தை 3 கிலோ எடையுடன் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்த மருத்துவ குழுவினர், சாந்தியின் உடலை பரிசோதனை செய்ததில் ரத்ததின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டதை அடுத்து சாந்தியிடம் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளுமாறு எடுத்துரைத்தனர். ஆனால் அதிகாரிகள் எவ்வளவு எடுத்துக்கூறினாலும் சாந்தி ஒத்துக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இதனால் சின்னமாதனிடம் மருத்துவர் சக்தி கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சின்னமாதன் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள சம்மதித்தார்.
பின்னர், மருத்துவர் சக்தி கிருஷ்ணன் குடும்ப நல இணை இயக்குநர் ராஜசேகரனுக்கு தகவல் அளித்தார். உடனடியாக இணை இயக்குநர் ராஜசேகரன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை நிபுணர் ஹரி பிரகாஷை அழைத்துக் கொண்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதேபோல் பர்கூர் மலைப்பகுதியில் இருந்து சின்னமாதனை அழைத்துக் கொண்டு மருத்துவ குழுவினரும் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு வைத்து சின்னமாதனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை(வாசெக்டோமி) செய்யப்பட்டது. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னர் நலமுடன் இருந்த சின்னமாதன் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து குடும்ப நல இணை இயக்குனர் ராஜசேகரன் அளித்த பேட்டியில் "ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிகவும் பாதுகாப்பானது. இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் ஆண்மை குறைபாடு ஏற்படும் என தவறான புரிதல் ஆண்களிடம் உள்ளது. ஆனால் எந்த ஒரு ஆண்மை குறைவும் ஏற்படாது. அதேபோல் அவர்கள் எப்பொழுதும் போல் உடல் உறவில் ஈடுபடலாம். எந்தவித பக்க விளைவுகள் இல்லை. எனவே மலைப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பாதுகாப்பான இந்த குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
பர்கூர் மலைப்பகுதியை பொறுத்தவரை சோழகர் இன பழங்குடியினர் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக மூன்று முதல் ஆறு குழந்தைகள் வரை பெற்றுக் கொண்டு பல பெண்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருவதன் காரணமாக தொடர்ந்து மருத்துவக் குழுவினர் இதை போல் உள்ள பெண்களை அணுகி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.