தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள தாளவாடி ராமபுரத்தைச் சேர்ந்த குமார் ஜெயம்மா தம்பதியரின், இரண்டாவது மகள் கீர்த்தனா(21). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துவருகிறார்.
கன்னட மொழியை பாடமாக எடுத்து படித்த கீர்த்தனாவுக்கு கல்லூரியில் சேர்ந்தவுடன் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் மீது ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்றார். சிலம்பம் மீது கீர்த்தனாவுக்கு ஈடுபாடு அதிகமாக இருந்ததால், அவருக்குப் பயிற்சியாளர் சுதாகரன் முறையாகப் பயிற்சியளித்தார்.
தீவிரப் பயிற்சியின் காரணமாக மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கீர்த்தனா சிறப்பிடம் பெற்றார். அண்மையில் இவர் கன்னியாகுமரியில் நடந்த தெற்காசிய சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றதன் காரணமாக அக்டோபர் இரண்டாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை மலேசியாவில் நடந்த உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, வஙகதேசம் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் கீர்த்தனா இரட்டை வாள் வீச்சு, குழு கம்பு வீச்சு ஆகிய போட்டிகளில் தங்கமும், தொடுமுனைப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
இந்தியா சார்பில் போட்டியில் தங்கம் வென்று பெருமை தேடித் தந்த கீர்த்தனாவுக்கு தாளவாடி மக்கள் சார்பில், பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கீர்த்தனா கூறுகையில், ”சிலம்ப விளையாட்டை அரசு ஊக்கவிக்க வேண்டும். மலேசியாவில் நடந்த போட்டியில் பங்கேற்க செலவிடப்பட்ட பயணத்தொகையை ஸ்பான்சர் நிறுவனம் ஏற்றுக்கொண்டதால் போட்டியில் கலந்துகொண்டோம். உலக அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்து ஊக்கவிக்க வேண்டும்” என்றார்.