தமிழ் ஆட்சிமொழி வார விழாவையொட்டி, வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் கல்லூரி மாணவிகள் சார்பில் பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், 'தமிழ்நாட்டின் தெருக்களில், இனி தமிழ் தான் எனும் உயரிய நிலையை எட்டுவோம்' என்ற தலைப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்தப் பேரணியை தனியார் கல்லூரி மாணவிகள் நடத்தினர்.
இப்பேரணியை கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி துணைக்கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தொடங்கி, கச்சேரிமேடு, பெரியார் திடல், கடைவீதி பேருந்து நிலையம், புதுப்பாளையம் வழியாக நாயக்கன்காடில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் இப்பேரணி முடிவடைந்தது.
இப்பேரணியில் 'தமிழ் வாழ்க, தமிழில் எழுதுவோம், தமிழில் கையெழுத்திடுவோம், தமிழில் பேசுவோம்' என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பி, பதாகைகளை ஏந்திச்சென்றனர். இந்தப் பேரணியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க :தலைமை செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வு