கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்கள் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் மாவட்ட எல்லைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முகக் கவசங்களின் விற்பனை அதிகரித்துள்ளதால், பெருபாலான கடைகளில் முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக முகக் கவசங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து அதனை சாமானியர்கள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஈரோடு மாவட்டம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளியான ஆனந்த் என்பவர் தனது சொந்த செலவில் பனியன் துணியிலான முகக் கவசங்களை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்ய திட்டமிட்டார். அதன்படி இரண்டு நாள்கள் இரவு பகலாக பணியாற்றி 1,500 முகக் கவசங்களை தயாரித்தார்.
அந்த முகக் கவசங்களை கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை கோபிசெட்டிபாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.
இந்த முகக் கவசங்களை பொதுமக்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என பலரும் ஆர்வமுடன் வாங்கி அணிந்து சென்றனர். கிராமங்களிலிருந்து வந்திருந்த பாமர மக்களும் இதனால் பயனடைந்தனர்.
இதையும் படிங்க... இலவசமாக முகக் கவசம் வழங்கும் பள்ளி மாணவி