ஈரோடு மாவட்டம் வெண்டிப்பாளையம் செல்லும் வழியில் இரண்டு ரயில்வே கிராசிங் உள்ளது. இதன் வழியாக ஈரோட்டிலிருந்து சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களிலிருந்து ஈரோடு ரயில் நிலையம் வழியாக கோவை மற்றும் கேரளாவுக்கு தினமும் 50க்கும் மேற்பட்ட ரெயில்கள் செல்கின்றன.
இந்த ரயில்வே கேட்டுகளின் இடைப்பட்ட பகுதியில் வெண்டிபாளையம், மோள கவுண்டன் பாளையம், லோக நாதபுரம் ஆகிய நகரப் பகுதிகள் உள்ளன. இந்த ரயில்வே கிராஸிங் வழியாக ரயில் செல்லும் நேரத்தில், ரயில்வே கேட் மூடப்படும்போது 15 நிமிடம் வரை போக்குவரத்து நிறுத்தப்படுவது வழக்கம். இதனால் இப்பகுதியிலுள்ள மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரி செல்வதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.
இது தவிர யாரேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் அழைத்தால் கூட ரயில்வே கேட்டுகள் இருப்பதால் குறித்த நேரத்துக்குள் ஊருக்குள் வர முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த இரண்டு ரயில்வே கேட்டுகளை கடந்து செல்ல மேம்பாலம் அல்லது சப்வே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெண்டிபாளையம் இரண்டாவது ரயில்வே கேட்டில் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் வகையில் சப்வே அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியை தொடங்கியது. இந்நிலையில், தற்போது இந்தப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ரயில்வே நிர்வாகம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், பல்வேறு இடங்களில் பணியாற்றக்கூடிய கேட்கீப்பர் பணியாளர்களை நீக்கி வருவதாக தெரிகிறது. வெண்டிபாளையம் ரயில்வே கிராஸிங்கில் உள்ள கேட் கீப்பரை நீக்கவே இங்கு சுரங்கப்பாதை கட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெயரளவில் மட்டுமே சுரங்கப்பாதை கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், கட்டுமானப் பணியை விரைந்து முடிக்காமல் ரயில்வே நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மத்திய, மாநில அரசின் இழுத்தடிப்பால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், சுரங்கப்பணி பாதியில் நிற்பதால் அவசர நேரங்களில் நகருக்குள் செல்ல பல்வேறு பகுதிகளை சுற்று செல்ல வேண்டிய நிலை எற்படுகிறது. எனவே, சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்காவிட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.