ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் தெங்குமரஹாடா. இப்பகுதியைச் சுற்றி மாயாறு ஓடுகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை சாலை வசதி கிடையாது எனபதால் அவர்கள் மாயாற்றில் பரிசல் பயணத்தை மட்டுமே பிரதான போக்குவரத்தாக பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், மாயாற்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் அதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தெங்குமரஹாடாவில் பரிசல் இயக்குவது ஆபத்தானது என்பதால், பரிசல் போக்குவரத்தை மாவட்ட நிர்வாகம் தடைசெய்து உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து, கிராமத்தை விட்டு மக்கள் வெளியேற முடியாததால், மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி பரிசல் இயக்கிவருகின்றனர். ஆபத்தை உணராமல் பரிசல் இயக்கப்படுவது காண்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மாயாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைத்துதர தெங்குமரஹாடா கிராம மக்கள் கடந்த சில மாதங்களாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை-வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.