ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பாரியூர் வெள்ளாளபாளையம், நஞ்சைகோபி ஆகிய கிராமங்களிலுள்ள 100 கால்நடை பராமரிப்பாளர்களுக்கு 40.22கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் விலையில்லா கறவை மாடுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
அப்போது பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ”கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் பன்முக மருத்துவமனை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதில் ஒன்று கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கால்நடை மருத்துவமனையில் ஸ்கேன் வசதி அறுவைச் சிகிச்சை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஈரோடு மாவட்டத்தில் அழிந்துவரும் மோளை ஆடுகளைப் பராமரிக்கவும் இனவிருத்தி செய்யவும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க முதலமைச்சருக்குப் பரிந்துரை செய்யவுள்ளேன்" என்றார்.
அதன் பிறகு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அவசர ஊர்தி என்றால் நினைவுக்கு வருவது 108. அதேபோல கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் என்றால் 1962 என்பதுதான் நினைவுக்கு வரவேண்டும். இத்திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணை தான் இனி இந்தியா முழுவதும் பின்பற்றவுள்ளனர்" என்றார். பின்னர் கால்நடை அவசர ஊர்தியை அமைச்சர்கள் பார்வையிட்டு அதிலிருக்கும் வசதிகளைப் பொதுமக்களுக்கு விளக்கினர். இந்த நிகழ்வின்போது கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் குழந்தைசாமி, கோட்டாச்சியர் ஜெயராமன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி உறுதி!