ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனித்தொகுதி அதிமுக வேட்பாளர் பண்ணாரி வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் கே.சி. கருப்பணன் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் ஆதரவு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "அதிமுக வெற்றிபெற்றால் அரசு கேபிள் இலவசமாக வழங்கப்படும். கேபிளில் குடும்ப உறவுகளைக் கெடுக்கும் நாடகத்தைப் பார்க்க முடியாது. செய்திகளைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தபோது எதிர்க்கட்சியினர் சாத்தியமில்லை என்றனர். ஆனால் இன்றுவரை சத்துணவு நடந்துவருகிறது.
தமிழ்நாட்டில் இலவச சைக்கிள், மடிக்கணினி, இலவச பஸ்பாஸ், பள்ளியில் இலவசக் கல்வி என அனைத்தும் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடந்துவருகிறது. ஆனால் பிகாரில் சைக்கிளும், மத்திய பிரதேசத்தில் மடிக்கணினியும் தொடர்ந்து இலவசமாக வழங்க முடியவில்லை.
பெண்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மிக்சி, கிரைண்டர், 100 யூனிட் மின்சாரம் வழங்கினார். இலவசங்கள் தொடர வேண்டுமெனில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து, வடக்குப்பேட்டை, சந்தன டிப்போ வீதி, பெரியகுளம், வரதம் பாளையம் ஆகிய இடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: ’திமுக என்றால் குடும்பக் கட்சி, ஊழல் கட்சி, கட்டப்பஞ்சாயத்துக் கட்சி’ - ஜெ.பி. நட்டா சிறப்புப் பேட்டி!