ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தலமலையில் ஏராளமான சொகுசு விடுதிகள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் கோவை, ஈரோடு போன்ற பகுதிகளிலிருந்து பலர், தலமலைக்கு வந்து தங்குவார்கள். நாளடையில் இங்கு ஆண்கள் மட்டும் வந்து தங்கி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. இந்நிலையில், தற்போது எல்லை மீறிய அவர்கள் பெண்களும் சேர்ந்துகொண்ட கும்மாளம் போடத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஜோதீஸ்வரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில், கிடா விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுமன் (36) என்பவர், தனது நண்பர்கள் வினோத், கார்த்திகேயன், ஹரீஸ், ஜெகதீஸ், சிவா, நந்து ஆகியோருடன் கலந்துகொண்டார். இதில் கேரளாவைச் சேர்ந்த ஸ்டேனியா, கோவை ஒண்டிபுதூரைச் சேர்ந்த பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விருந்துக்கு பின் தொழில் ரீதியான பணத்தை பங்கு பிரிப்பதில் சுமனுடன் ஜோதீஸ்வரமூர்த்திக்கு தகராறு ஏற்பட்டது. இருவரிடையே அடிதடி ஏற்பட்டபோது ஜோதீஸ்வரமூர்த்தியின் நண்பர்கள் சுமனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற வந்த பெண் தோழிகள் ஸ்டேனியா, பிரியாவையும் ஜோதீஸ்வரமூர்த்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த அடிதடி தகராறின்போது சத்தம் கேட்டு ஓடிவந்த தலமலை கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து குடிபோதையில் கிராமத்தின் அமைதியை கெடுக்கும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஜோதீஸ்வரமூர்த்தி, சார்ல்ஸ், ரகு, கந்தசாமி ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.