தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.
![புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-04-sathy-mattu-santhai-vis-tn10009_04032021174014_0403f_1614859814_512.jpg)
இந்நிலையில் இன்று (மார்ச் 4) புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு நாட்டு மாடு, ஜெர்சி, சிந்து, கலப்பின வகை, கன்று குட்டிகள் என 450-க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டுவந்தனர்.
நாட்டு மாடு 50 ஆயிரம்முதல் 75 ஆயிரம் ரூபாய்வரையிலும், ஜெர்சி மாடு 23 ஆயிரம்முதல் 42 ஆயிரம் ரூபாய்வரையிலும், சிந்து, கலப்பின வகை மாடுகள் 20 ஆயிரம்முதல் 34 ஆயிரம் ரூபாய்வரையிலும் விலைபோயின.
சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட 450-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.90 லட்சத்துக்கு விற்பனையானது. வழக்கமாகச் சந்தைக்கு 700-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வரும்.
இரண்டு கோடிக்குமேல் வியாபாரம் நடக்கும். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஐம்பதாயிரத்திற்கும் மேல் கொண்டுசெல்ல முடிவதில்லை.
இதனால் வியாபாரிகளின் வருகை இன்று (மார்ச் 4) குறைவாகவே இருந்தது. இன்றைய சந்தைக்கு 450 மாடுகள் மட்டும் விற்பனைக்கு வந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.