ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள வார சந்தை தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியான இரண்டாவது பெரிய சந்தையாகும். 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து மளிகைப் பொருள்களை வாங்கிச்செல்வது வழக்கம்.
குறிப்பாக, புளியம்பட்டி சந்தையில் விற்பனை செய்யப்படும் விதை வெங்காயத்தை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் வாங்கி சென்று தங்களது விவசாய தோட்டங்களில் நடவு செய்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் விதை வெங்காயத்தை வாங்கிச்சென்று நடவு செய்வதில் ஆர்வம் காட்டினர்.
இச்சந்தையில் மட்டும் இரண்டு வாரங்களாக வியாழனன்று விதை வெங்காயம் 600 மூட்டைகள் வரை வரத்து இருந்தது. அப்போது விதை வெங்காயம் கிலோ ரூ. 120 முதல் ரூ. 130 வரை விற்பனையானது. வழக்கமாக 600 மூட்டைகள் வரை வரத்து இருந்த நிலையில் இன்று 60 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் விதை வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 190க்கு விற்பனையானது.
இதனால் விதை வெங்காயம் வாங்க ஆர்வத்துடன் வந்த விவசாயிகள் விலை அதிகரிப்பின் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சமையலுக்கு பயன்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனையானது.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளின் கண்ணீரை கண்டுகொண்டதா வெங்காயம்; விலையில் சற்று சறுக்கல்!