ஈரோடு தாளவாடி அருகே எட்டிக்குட்டை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் ஜீர்கள்ளி வனப்பகுதியில் உள்ள தனது கரும்பு தோட்டத்தில் காவலுக்காக இருந்தபோது அந்த தோட்டத்துக்குள் ஒற்றை யானை புகுந்துள்ளது.
அப்போது யானையை பார்த்து டார்ச் லைட் அடித்த சரவணனை தாக்க யானை ஓடிவந்தது. இதனால் யானையிடமிருந்து தப்பிக்க ஓடிய அவர் அருகில் உள்ள குழிக்குள் தவறி விழுந்தார்.
அதன்பிறகு குழிக்குள் சப்தம் வருவதை கேட்ட உறவினர்கள் சரவணனை மீட்டு தாளவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக அவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.