ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த டி.ஜி புதூரைச் சேர்ந்தவர் சின்னான். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தம்பதியிடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கணவர் சின்னானிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக்கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மஞ்சுளா மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சின்னான் அதேபகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையறிந்த முதல்மனைவி மஞ்சுளா தனது நண்பரான செந்திலை கடந்த ஜனவரி மாதம் கணவர் வீட்டிற்கு அனுப்பி சமாதானம் பேச முயன்றுள்ளார். ஆனால், சமாதானம் பேச வந்த செந்தில், சின்னான், அவரது தாயார், தங்கையை தாக்கியுள்ளார். இதயைடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்தது மட்டுமல்லாமல், தங்களை தாக்கிய செந்தில் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சின்னான் தனது தாய், தங்கையுடன் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த காவலர்கள், அவர்களை தடுத்து நிறுத்தி மீட்டனர். பின்பு தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என காவலர்கள் உறுதியளித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் எஸ்.பி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.