ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பெரியகொடிவேரி, தாசப்பகவுண்டன்புதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக விவசாய தோட்டங்களில் புகுந்த சிறுத்தை ஒன்று அங்குள்ள ஆடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடிவருகிறது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் பொருத்தியும் தாச்சப்பகவுண்டன்புதூர், கொங்கர்பாளையம், கொலிஞ்சிக்காடு ஆகிய பகுதிகளில் கூண்டு வைத்தும் இரவு பகலாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
சிறுத்தையை கரும்பு தோட்டம், வாழைத்தோட்டங்களில் நேரில் பார்த்ததாக விவசாயிகள் தெரிவித்து வருவதையடுத்து, மாலை ஆறு மணிக்குமேல் விவசாயிகள், பொதுமக்கள், குழந்தைகள் ஆகியோர் வீட்டுக்கு வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வீட்டின் ஜன்னலில் சிறுத்தை ஒன்று எட்டிப்பார்த்து கம்பியை கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் இந்த வீடியோ அப்பகுதியில் எடுக்கப்பட்டது இல்லை. அதுபோல் இங்கு ஏதும் நடக்கவில்லை. ஆகவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டார்.
கால்நடைகளை தாக்கிவரும் சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: முக்கடல் அணைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் பீதி.!