ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் அருள்வாடி, திகினாரை, தொட்டகாசனுார், ஜீரஹள்ளி, மல்லன்குழி, தொட்டபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மலைக் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு சாகுபடிக்கான சீரான வெப்பநிலை நிலவுவதால் பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாத நிலையில், சொட்டுநீர் பாசனம் மூலம் மூன்று மாதப்பயிரான முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக முட்டைக்கோஸின் விலை சரிந்து காணப்பட்டதால், சிறு, குறு விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு குறைவாகவே பயிரிட்டனர். இதனால் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவாகிறது.
கடந்த சில மாதங்களாகவே முட்டைக்கோஸ் விலை கிலோ ரூ.3 ஆக சரிந்து அதே விலை நீடித்தது. தற்போது ஏக்கர் ஒன்றுக்கு மகசூல் 12 டன் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் முட்டைக்கோஸ் விலை கிலோ ரூ.10 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இங்கு விளையும் முட்டைக்கோஸ்களை மேட்டுப்பாளையம், ஈரோடு, கோவை மற்றும் கேரளாவுக்கு வாகனம் மூலம் அனுப்பப்படுகிறது. கேரள வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து கொள்முதல் செய்து வருவதால் முட்டைக்கோஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.