ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதை தடுக்கவும், வனவிலங்குகள் தீவனம், குடிநீர் தேடி சாலையைக் கடந்து செல்லவதற்கு வசதியாகவும் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
இதையடுத்து கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்கள் தமிழக எல்லையான காராப்பள்ளம் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, காலை 6 மணி முதல் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் ஆசனூர், பண்ணாரி சோதனைச்சாவடியிலிருந்தும் காலை 6 மணிக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.
இதனால், கர்நாடகத்திலிருந்து வந்த சரக்குவாகன ஓட்டுநர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், காராப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே இன்று காலை 6 மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது,ஆசனூரிலிருந்து செல்லும் வாகனங்களை அதிகாலை 4 மணி முதல் அனுமதிக்க வேண்டும் எனவும், காராப்பள்ளம் சோதனைச் சாவடியில் அதிகாலை 5 மணி முதல் வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதனால் இரு மாநிலங்களிடையே சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தாளவாடி காவல் ஆய்வாளர் அன்பரசு, சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை ஏற்று வாகன ஓட்டிகள் கலைந்து சென்றனர்.