ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோழி விற்பனை நிலையங்களில் இறைச்சி விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. இந்நிலையில் பவானி சாகர் அணை நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்படும் மீன்கள், அணை முன்புள்ள மீன் வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது பொதுமக்கள் கோழி இறைச்சிகளை வாங்க மறுத்து, தற்போது மீன்கள் மீது தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளனர். மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பவானி சாகர் மீன் விற்பனை நிலையங்களில் வழக்கத்தைவிட, பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஈரோடு மீன் விற்பனை நிலையங்களில், ஜிலேபி ரக மீன்கள் கிலோ 100 ரூபாய்க்கும், கட்லா, ரோகு, மிருகால் உள்ளிட்ட வகை மீன்கள் கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது பவானி சாகர் அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், மீன் வரத்து தினந்தோறும் நான்கு டன்களாக அதிகரித்துள்ளது எனவும் மீன் விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் வீழ்ச்சி!