ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணைக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர். சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி-பண்ணாரி சாலையில், பவானிசாகர் அணையின் முன்புறம், பவானி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்ட பாலம் பழுதடைந்தது.
இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக புங்கார், பெரியார் நகர், காராச்சிக்கொரை, முத்துராஜா நகர், கொத்தமங்கலம், புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம், தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டுவதற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், தற்போது கட்டுமானப் பணி பாதியிலேயே நிற்கிறது.
பாலம் கட்டுமான பணி தாமதம் ஆவதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் ஆவன செய்ய வேண்டும் என்று பவானிசாகர் அணை பகுதியில் உள்ள கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து!