'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற தலைப்பில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கோவை சந்திப்பில் இன்று (ஜன. 06) பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, "பவானிசாகர் பகுதியில் 12 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் ரூ.7.5 கோடியில் கட்டடம் கொடுத்தது அதிமுக. சத்தியமங்கலத்திலிருந்து பவானி மற்றும் மேட்டுப்பாளையத்திற்குச் சாலைகள், அத்திக்கடவு அவிநாசி திட்டம் ரூ.1,626 கோடி செலவில் செயல்படுத்தப்படுவதால், பவானிசாகர் தொகுதியில் 32 குளங்களில் நீர் நிரப்பப்படும். திமுக மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டத்தில் பெற்ற மனுக்களுக்குப் பதிலளிக்குமா? திமுக வெற்றி பெற்றபின் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
ஸ்டாலினும், அழகிரியும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்தான். அழகிரிக்கே கட்சியில் வாய்ப்பு அளிக்காமல் உள்ளவர்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்கள். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதன் சேர்மேன் தற்போது ஸ்டாலின், பின்னர் உதயநிதி ஸ்டாலின். ஒருங்கிணைந்த கோவை மாவட்டமாக இருந்தபோது, விவசாயிகளின் பம்பு கட்டணம் குறைக்கப் போராடியபோது, விவசாயிகளைச் சுட்டுக் கொன்றவர்கள் திமுக. திமுகவில் உள்ள அனைவரும் ரவுடிகள். நமது (அதிமுக) கட்சியில் உள்ளவர்கள் உண்மையில் விவசாயிகள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் விருதுபெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. கிராமங்களில் ஏழை மக்களுக்கு குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளோம். தாளவாடி மலைப்பகுதியில் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மின்வெட்டு வரும். பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருள்களை வழங்குகிறோம்.
சிறப்பாகப் பொங்கலை கொண்டாடுங்கள். அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகள்" என்றார் முதலமைச்சர்.
கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோதே, அவ்வழியாக வந்த ஆம்புலன்சிற்கு வழிவிட முதலமைச்சர் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.