கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகம்பாளையம் பிரிவில் ஒரே இருசக்கர வாகனத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் லட்சுமணன், 10 ஆம் வகுப்பு மாணவர் மதன்குமார், கூலித்தொழிலாளி விஜய் ஆகிய மூன்று பேரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், எதிரே வந்த செங்கல் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 12ஆம் வகுப்பு மாணவரான லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், உயிருக்குப் போராடிய இருவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த லட்சுமணின் சடலத்தை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து மேற்கொண்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதும், தலைக்கவசம் அணியாமல் சென்றதும் தான் உயிரிழப்புக்குக் காரணம் என்று அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.