ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது. அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த அணை கடந்த ஆண்டு பெய்த பலத்தமழை காரணமாக முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து பாசனப்பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.
கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்காலில் முதல்போக பாசனம் முடிந்து, கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் இரண்டாம் போக பாசனத்திற்கு எள், நிலக்கடலை சாகுபடிக்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில், விநாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 9ஆம் தேதி அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 105 அடியாக இருந்த நிலையில் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டதால், மெல்ல மெல்ல குறைந்து தற்போது 103.6 அடியாக சரிந்தது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 368 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 103.66 அடியாகவும், நீர் இருப்பு 31.6 டிஎம்சி யாகவும் உள்ளது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடி நீரும், பவானி ஆற்றில் 500 கனஅடி நீரும் என மொத்தம் 2300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 8 நாட்களில் அணையின் நீர்மட்டம் ஒன்றரை அடி சரிந்துள்ளது.
இதையும் படிங்க: கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு