கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு கடைவீதியில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறிச்சந்தை விசாலமான, நெருக்கடியற்ற பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 25 நாள்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
மேலும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் வியாபாரிகள் தங்களது பொருள்களை கொண்டு வந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும், 6 மணி முதல் 9 மணி வரை காய்கறிச் சந்தை வாடிக்கையாளர்களுக்கு திறந்திருக்கும் என்பது கட்டுப்பாடாகவும், விதியாகவும் உள்ளது.
இந்நிலையில் இன்று (ஏப்.30) காலை கட்டுப்பாட்டு நேரத்தைத் கடந்து சந்தைக்கு வந்த பழக்கடை வியாபாரியை தடுத்து நிறுத்திய காவலர் நேரம் கடந்து விட்டதால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது காவலர் வியாபாரியை கடும் வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழவியாபாரி சக வியாபாரிகளுடன் சேர்ந்து காவலர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் காவலர் மன்னிப்பு கேட்காவிட்டால் அனைத்து வியாபாரிகளையும் இணைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே உதவி ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுடன் பேசி சமாதானம் செய்தனர்.
மேலும் வியாபாரிகள் தாமதமாக வராமல் உரிய நேரத்திற்குள் சந்தைக்குள் நுழைந்திட வேண்டும், மீறினால் அனுமதிக்க முடியாது என்றும் இதுபோன்ற சமயங்களில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடாமல் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்றும் காவல்துறையினர் கூறினர்.
வியாபாரிகளுக்கு அறிமுகமான காவலர்களை இதுபோன்ற பணிக்கு அமர்த்திட வேண்டும் என்றும் வியாபாரிகள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வியாபாரியை கடுமையாக பேசிய காவலர் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.