சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 130ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (ஏப். 14) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் புகைப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா சிகிச்சைக்காக இரண்டாயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், கூடுதலாக ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர், அந்தியூர் ஆகிய நான்கு பகுதிகளில் கரோனா பரிசோதனை மையங்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.
மேலும் மாவட்டத்தில் பல்வேறு கட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள், அபராதம் விதிப்புகளால் 80 விழுக்காடு பொதுமக்கள் முகக்கவசம் அணிவதாகவும், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், தேவைக்கேற்ப தடுப்பூசி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், வருவாய் அலுவலர் சைபுதீன், செய்தி தொடர்பு அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா விதிமீறல்: தமிழ்நாடு முழுவதும் 2.30 லட்சம் பேர் மீது வழக்கு