திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சிவசக்திவேல் இல்ல நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், "தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி பயில்வதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நீதியரசர் கலையரசன் வழங்கிய தீர்ப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் மாநில அரசாங்கம் அதை 7.5ஆக குறைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
முன்னதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க அரசாணை மூலமாக அமல்படுத்தினார். இதைப் பார்த்த பிறகுதான் அதிமுக அரசு அவசர அவசரமாக அதை செய்திருக்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தினால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது.
காங்கிரஸ் கட்சியில் இருக்கிற 90% மக்கள் ஆன்மிகத்தை ஏற்றுக் கொள்கிறவர்கள். மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு போன்ற தனிமனிதர் வேண்டுமானால் நாத்திகவாதியாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் இயக்கம் என்பது ஆன்மிகத்தின் மீது அதிக பற்றுள்ள இயக்கம். நாங்கள் கடவுளை வணங்குகிறோம், மதிக்கிறோம். ஆனால் அந்த பெயரால் அரசியல் செய்ய தயாரில்லை.
உண்மையில் பாஜகவிற்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எனவே முருகனை பிடித்திருக்கிறார்கள. ஆனால் பாஜகவின் முருகன் எந்த காலத்திலும் எங்களை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்பதை நான் தெளிவு படுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.