திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் தொடர்ந்து நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு கடந்த 14ஆம் தேதி முதல் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறும், 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஜனவரி 18) ஏழாம் நாள் திருவிழாவான இன்று மாலை தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது.
தைப்பூசத்தேரோட்டமானது வழக்கமாக கட்டைத்தேரில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா பரவல் அச்சம் காரணமாக பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்திற்கு உள்ளேயே முத்துக்குமாரசாமி- வள்ளி, தெய்வானை சமேதரராக எழுந்தருளி கோயில் வளாகத்திலேயே வலம் வந்து நிறைவடைந்தது.
பழனி தைப்பூசத் திருவிழாவின் வரலாற்றிலேயே முதன்முதலாக தைப்பூசத் தேரோட்டம் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தைப்பூசத்தை முன்னிட்டு எருகாட்டும் விழா நடத்திய சொரையூர் கிராமத்தினர்