திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று (ஜனவரி 13) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத் திருவிழா நடந்தாலும் கரோனா காரணமாக இன்றும், நாளையும் (ஜனவரி 14) இரண்டு நாள்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் முருகனை தரிசனம்செய்ய தமிழ்நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து வந்த பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம்செய்தனர்.
முன்னதாக பாத யாத்திரை வந்த பக்தர்கள் பழனி சண்முக நதியில் புனித நீராடி பின்பு உடல் முழுவதும் அலகு குத்தியபடி பிரமாண்டமான பறவைக்காவடி எடுத்துவந்தனர். ஒரு பறவைக்காவடியில் 10 பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அவர்களுடன் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 10 அடி நீளமுள்ள அலகு குத்தி நடந்துவந்தனர். ராட்சத கிரேன்களில் உடல் முழுதும் அழகு குத்தி பறவைக் காவடிகளில் வந்தவர்களைக் கண்டு பொதுமக்கள் மெய்சிலிர்த்தனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை