திண்டுக்கல் மாவட்டம், நந்தவனப்பட்டி டிரஸ்சரி (treasury ) காலணியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா. இவர், திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், கணவர் பால்ராஜ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக, அன்னை இந்திரா தனது அக்கா வாசுகிவுடன் வாழ்ந்து வந்தார். அன்னை இந்திராவிற்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததால், அவர் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ளார். கடந்தாண்டு(2020) அக்டோபர் 16 முதல் அன்னை இந்திரா மருத்துவ விடுமுறையில் சென்றார்.
விடுமுறை முடிந்து டிசம்பர் 25 ஆம் தேதி மீண்டும் பணிக்கு வர வேண்டும். ஆனால் அவர் பணிக்குத் திரும்பவில்லை. இதனையடுத்து நேற்று (டிச.31) இரண்டு பெண் காவலர்கள் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்.
மேலும் பூட்டப்பட்ட அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பெண் காவலர்கள் உடனடியாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உள்ளே சென்று பார்த்த பொழுது, அன்னை இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அன்னை இந்திராவின் அக்கா வாசுகி கூறுகையில், "டிசம்பர் 7ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு அன்னை இந்திரா இறந்து விட்டார். அவர் மீண்டும் உயிர்த்தெழுவார், அதற்காக தினமும் நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம்" என்றார்.
பின்னர் காவல் துறையினர் அவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த பெண் காவலர் உடலை வீட்டில் வைத்த சம்பவம் குறித்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியதோடு, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சிறைக் கைதி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு