அதில், ”குடகனாறு பாசனத்திற்குத் தேவையான அளவு கூடுதலாகத் தண்ணீர் திறக்க வேண்டுமென்று அப்பகுதி நீர்ப்பாசன விவசாயிகள் பலமுறை போராடி வலியுறுத்தியும் அரசு அவர்களின் நியாயமான கோரிக்கைக்குச் செவிசாய்க்காதது, உணவளிக்கும் உழவர்களை வஞ்சிக்கும் செயலாகும். மேலும், போராடிய வேளாண் பெருமக்ககள்மீதே காவல் துறையை ஏவி கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.
திண்டுக்கல் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகளின் தண்ணீர், ஆத்தூரில் அமைந்துள்ள காமராஜர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் அணை நிரம்பும்போதும், குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் காமராஜர் அணைக்குத் தண்ணீர் வரும் இடத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டதனால் கடந்த சில ஆண்டுகளாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து, நீர்த்திறப்பு நிறுத்தப்பட்டது.
இதனால் நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் மேற்கு, வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை வருவாய் கோட்டங்களுக்கு உள்பட்ட பாசன கிராமங்களில் வேளாண்மை செய்யப்படாமல் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டுப் பரவலாக மழைபெய்து அணை நிரம்பியபோதும் குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
வேளாண் பெருங்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட பிறகு திறந்துவிடப்பட்ட தண்ணீரும் போதுமானதாக இல்லை. இதனால் ஏற்கனவே கரொனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடும் வேளாண் பெருமக்கள், தற்போது வாழ்வா சாவா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குடகனாற்றில் தண்ணீர் திறக்கவும், இராஜவாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை இடிக்கவும் வலியுறுத்தி மனு அளிப்பதற்காக ஆலமரத்துப்பட்டி, ஆத்தூர், அனுமந்தராயன்கோட்டை, வக்கம்பட்டி, அகரம், குட்டத்துப்பட்டி, வீரக்கல், பித்தளைபட்டி, அணைப்பட்டி, ஊராட்சிகளைச் சேர்ந்த குடகனாறு பாசனத்துக்கு உள்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் கையில் கருப்புக்கொடியை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னதாக ஊர்வலமாகச் சென்றுள்ளனர். ஆனால் அவர்களை மனு அளிக்கவிடாமல் தடுத்தது மட்டுமின்றி, அவர்கள் மீது காவல் துறை மூலம் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
எனவே, தமிழ்நாடு அரசு குடகனாறு வேளாண்பெருங்குடிமக்களின் அடிப்படை உரிமையையும், உயிர்நாடித் தேவையுமான நீரினை உடனடியாகத் திறந்துவிட வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.