திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பாச்சலூர் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில், தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மே 5) இரவு சரக்கு வாகனத்தில் தார்சாலை அமைக்கும் பணிக்கான பொருட்களை ஏற்றி பணியாளர்களுடன் வந்தது.
அப்போது தட்டக்குழிக்காடு என்ற பகுதி அருகே வரும்போது, சரக்கு வாகனத்தின் சக்கரம் கழன்றுவிட்டதால் வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் வாகனத்தின் ஓட்டுநர் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து தாண்டிக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.