பழனியை அடுத்து கொழுமங்கொண்டான் கிராமத்தில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிகளவு உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாகவும், கிணற்று பாசனத்தின் மூலமாகவும் கொழுமங்கொண்டான் கிராமத்தில் மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
கிராமத்தில் மயில்கள் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். இந்நிலையில் இங்குள்ள கரிசல் குளப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாமிநாதபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பழனி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கால்நடை மருத்துவர் உதவியுடன் இறந்த மயில்களை உடற்கூறாய்வு செய்து குழி தோண்டி புதைத்தனர்.
பயிர்களை மயில்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் மயில்களுக்கு விஷம் வைத்தனரா, விவசாய நிலத்தில் கிடந்த உரங்களை சாப்பிட்டதன் காரணமாக மயில்கள் உயிரிழந்ததா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.