திண்டுக்கல்லில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. மேலும் ஆங்காங்கே நலத்திட்ட உதவிகள், ரத்த தான முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் பாஜகவின் சார்பில் வைக்கப்பட்ட ஆட்டோ நிலைய பெயர் பலகையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தினர். இதையறிந்த பாஜகவினர் பெயர் பலகையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஆட்டோ பெயர் பலகையை சேதப்படுத்திய நபர்களை தேடிவருகின்றனர். இந்த களேபரம் முடிவடையாத நிலையில் திண்டுக்கல் நகர் பகுதியில் பாஜக சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மீது எஸ்டிபிஐ கட்சியின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் பாஜக சுவரொட்டிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு வர்ணத்தை பூசிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பாஜக சார்பில் புகார் கொடுத்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதனால் நேற்று (செப் 23) இரவு திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையம் முன்பு திரண்ட பாஜகவினர் எஸ்டிபிஐ கட்சி, பிரதமர் நரேந்திர மோடி போஸ்டர்கள் மீது கருப்பு சாயம் பூசிய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.