திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ளது, மேல்கரைப்பட்டி. இங்கு எவிஏஜென் என்கிற தனியார் கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த நான்காயிரம் கோழிகளைக்கொன்று, வயலூர் அருகே உள்ள நந்தகுமார் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் புதைக்க முடிவு செய்தனர்.
இதன்படி இன்று(அக்.16) அதிகாலை இறந்த கோழிகள் வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டு நந்தகுமார் என்பவரின் விவசாய தோட்டத்தில் இறந்த கோழிகளை புதைக்க எடுத்துச்சென்றனர். இதுகுறித்த தகவல் அறிந்து, வயலூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராணியின் கணவர் மகுடீஸ்வரன் தலைமையிலான பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
குழி தோண்டி கோழிகளை புதைக்க இருப்பதை தடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோழிகளை புதைக்க வந்த தனியார் நிறுவன அலுவலர்கள், கோழிகள் விற்பனை ஆகாததால் கோழிகளை கருணைக் கொலை செய்து அதனை புதைக்க வந்ததாகவும், கோழி இறைச்சி நிறுவனத்தில் நந்தகுமார் வேலை செய்பவர் என்பதால், அவரது சம்மதத்தோடு அவருடைய தோட்டத்தில் புதைப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து கோழிகளை இங்கு புதைக்கக்கூடாது என்றும் வைரஸ் பாதித்த கோழிகளாக இருக்கலாம் எனவும், எனவே கோழிகளை புதைக்கக்கூடாது எனவும் கூறி பொதுமக்கள் தடுத்தனர். ஒரு கோழி இறைச்சி நிறுவனத்திற்கு ஆதரவாக நெய்க்காரப்பட்டி பேரூர் கழக திமுக செயலாளர் அபுதாகீர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக பேரூர் கழக செயலாளர் அபுதாகீர் கோழி இறைச்சி நிறுவனத்தில் கமிஷன் பெற்றுக் கொண்டு, இதே வேலையை அடிக்கடி செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாமிநாதபுரம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கோழிகளை இப்பகுதியில் புதைக்க மாட்டோம் என்றும், இனிமேல் இப்பகுதியில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் தனியார் கோழி இறைச்சி நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனமும் திருப்பி எடுத்துச்செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோயிலை இடிச்சா மூணு நாள்ல சுடுகாட்டுக்கு போவ... கெடு கொடுத்த பெண் சாமியார் - அலறியடித்து ஓடிய அதிகாரிகள்